நடிகர் சிம்புவுடன் அலை, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய இரண்டு படங்களில் ஜோடியாக நடித்திருக்கும் த்ரிஷா அவருடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறார். கொரோனா லாக்டவுனில் இருவரும் இணைந்து கவுதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென சிம்பு - த்ரிஷா இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் ஆங்கில முன்னணி செய்தி ஊடகங்கள் தொடங்கி பெரும்பாலான இணைய ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.
இதுகுறித்து சிம்பு தரப்பில் நாம் விசாரித்த போது, “உலகமே கொரோனா நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. ஏழை, எளிய மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் இதுபோன்று வதந்தி பரப்பி சிலர் மகிழ்கின்றனர். இதில் உண்மையில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
நயன்தாரா, ஹன்சிகா ஆகிய இரண்டு நடிகைகள் உடனும் நடிகர் சிம்பு காதல் வயப்பட்டு பின்னர் பிரேக்கப் செய்ததாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவித்தாலும், நயன்தாராவுடன் ‘இது நம்ம ஆளு’என்ற படத்திலும், ஹன்சிகாவுடன் தற்போது மஹா என்ற படத்திலும் இணைந்து நடித்துள்ளார் சிம்பு.
தனது திருமணம் உறுதியானதுடன் தானே முறையாக அறிவிப்பேன் என்று சிம்பு பல முறை கூறினாலும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளும் பரவி வருகின்றன.
கடந்த மாதம் கூட லண்டனில் உள்ள கோடீஸ்வர பெண்ணை சிம்பு திருமணம் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து சிம்புவின் பெற்றோர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மைத்தன்மை அற்றவை.
எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
0 Comments